ஓம் நமசிவாய! ஓம்! ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய! ஓம்! ஓம் நமசிவாய!
- ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே. (ஓம்)
- என்னிலே இருந்தவொன்றை யானறிந்த தில்லையே
என்னிலே இருந்தவொன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தவொன்றை யாவர்காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யானுணர்ந்து கொண்டேனே. (ஓம்)
- நானதேது நீயதேது நடுவினின்ற தேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே. (ஓம்)
- அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல்
அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே. (ஓம்)
- இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே. (ஓம்)
- உருவுமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல வற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே. (ஓம்)
- மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத் தடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நங்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாய மென்னமாய மீசனே. (ஓம்)
- ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. (ஓம்)
- நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே. (ஓம்)
- பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை. (ஓம்)
- அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே. (ஓம்)
- அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. (ஓம்)
- மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே. (ஓம்)
- நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே. (ஓம்)
- இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே. (ஓம்)
- கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே. (ஓம்)
- விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே. (ஓம்)
- அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே. (ஓம்)
- உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே. (ஓம்)
- ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே. (ஓம்)